செய்திகள்

நாகை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் மரணம்

Published On 2016-10-20 20:35 IST   |   Update On 2016-10-20 20:35:00 IST
நாகை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் மரணம் அடைந்தார்.இது குறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழையூர் அருகே உள்ள திருப்பூண்டி காரை நகர் காலனி தெருவை சேர்ந்தவர் முரளி (26). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அங்கு கோவையை சேர்ந்த அமுதா என்பவரும் வேலை பார்த்தார். இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. அக் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. அப்போது முரளியின் தாய், தங்கை ஆகியோர் அமுதாவிடம் 10 பவுன் நகை கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 24.9.16 அன்று அமுதா மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் கொடுத்து இருந்தார்.

மனைவி இறந்ததில் இருந்து முரளி வேதனையில் இருந்து வந்தார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இது குறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News