செய்திகள்

சிங்கம்புணரியில் வீடு தீப்பிடித்து எரிந்து நாசம்

Published On 2016-10-16 22:48 IST   |   Update On 2016-10-16 22:48:00 IST
சிங்கம்புணரியில் உள்ள வீடு தீப்பிடித்து எரிந்தத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமானது.
சிங்கம்புணரி:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி செட்டியார் தெருவில் வசிப்பவர் பூமிநாதன். டெய்லரான இவர் அப்பகுதியிலேயே கடை வைத்து தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் பூமிநாதன் நேற்று முன்தினம் இரவு தனது கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது மனைவியும், குழந்தைகளும் வெளியூர் சென்றிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது.

இந்த தீவிபத்தில் ஏற்பட்ட புகை மண்டலம் தெரு முழுவதும் பரவியது. இதனால் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் சுமார் 1 மணி போராடி மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் எரிந்து போனது. தீவிபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மரச்சாமான்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மேலும் இந்த தீவிபத்தால் பூமிநாதனிடம் தீபாவளி பண்டிகைக்காக தைக்க கொடுத்திருந்த துணிகளும் எரிந்து போயின. ஆனால் தீவிபத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News