செய்திகள்

சிவகிரி அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 3 லட்சம் பணம் பறிப்பு

Published On 2016-10-06 09:40 IST   |   Update On 2016-10-06 09:40:00 IST
சிவகிரி அருகே டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி ரூ. 3 லட்சம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிவகிரி:

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரியை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி (வயது 43). இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று இரவு 10.15 மணி அளவில் வழக்கம் போல டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் டாஸ்மாக் கடையில் விற்பனையான பணம் ரூ. 3 லட்சத்து 10 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்திருந்தார்.

டாஸ்மாக் கடையில் இருந்து சிறிது தூரம் சென்று கொண்டிருந்த போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முத்துக்குமாரசாமியை வழி மறித்தனர். அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி முத்துக்குமாரசாமியிடம் இருந்த பணத்தை கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் முத்துக்குமாரசாமி கழுத்தில் அரிவாளை வைத்து அவர் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இச்சம்பவம் குறித்து சிவகிரிபோலீசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் மாரிஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி உள்ளார்களா? என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.

டாஸ்மாக் ஊழியர் முத்துகுமாரசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News