செய்திகள்

குடும்பத் தகராறில் போலீஸ்காரருக்கு கத்திக்குத்து: சகோதரியின் கணவருக்கு வலைவீச்சு

Published On 2016-10-05 22:03 IST   |   Update On 2016-10-05 22:03:00 IST
குடும்ப தகராறில் போஸ்காரரை கத்தியால் குத்திய உறவினரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா அல்லிநகரத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது33). ராமேசுவரத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரி தனலட்சுமிக்கும் அல்லிநகரத்தை சேர்ந்த முக்தீஸ்வரன் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தனலட்சுமி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று விடுமுறையில் ராஜதுரை ஊருக்கு வந்திருந்தார். இந்த நேரத்தில் முக்தீஸ்வரன் தனது மனைவியை அழைக்க அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முக்தீஸ்வரனுக்கும், ராஜதுரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முக்தீஸ்வரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜதுரையை குத்திவிட்டு ஓடிவிட்டார்.

காயம் அடைந்த ராஜதுரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முக்தீஸ்வரனை தேடி வருகிறார்கள்.

Similar News