வேதாரண்யம் அருகே படகு பழுதாகி கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி. இவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 30-ந் தேதி குட்டியாண்டி (வயது 50), வேதையன் (50), மகேந்திரன் (46), சுந்தர் (55) ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் நேற்று மதியம் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை. நேற்று அவர்கள் சென்ற படகு பழுதாகி விட்டதால் நடுக்கடலில் தத்தளித்தனர். இதுபற்றி மகேந்திரன் படகு உரிமையாளர் தெட்சிணாமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். அப்போது இரவாகி விட்டதால் அவர்களை தேட முடியவில்லை.
இதைத்தொடர்ந்து இன்று வேறு படகுகளில் மீனவர்கள் சென்று நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த 4 மீனவர்களையும் மீட்டனர். அவர்களுடன் கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் சென்று உதவி புரிந்தனர். மீட்கப்பட்ட மீனவர்களை கரைக்கு அழைத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.