செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் கைது

Published On 2016-09-25 10:23 GMT   |   Update On 2016-09-25 10:23 GMT
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமம் மேலவெளி செக்கடித் தெருவைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகள் பிரீத்தி ( வயது14). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் அவரது தாயார் சங்கீதா பிரீத்திக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கு பிரீத்தி மறுத்துள்ளார். ஆனால் வலுக்கட்டாயமாக ஜெயங்கொண்டம் அடுத்த மலங்கன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம் மகன் கிருஷ்ண மூர்த்தி (29) என்பவருக்கு சோழன்குறிச்சி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் கடந்த மாதம் 19-ம் தேதி திருமணம் செய்து வைத்தனர்.

இதனால் மனவேதனையில் இருந்த பிரீத்தி அரியலூர் சைல்டு லைனுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததின் பேரில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் சுகுணா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ குமாரி விசாரணை நடத்தி, பிரீத்தியின் தாயார் சங்கீதா, புதுமாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி, அவரது தாயார் சாந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கிருஷ்ணமூர்த்தி, சாந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சங்கீதாவை தேடி வருகின்றனர்.

Similar News