செய்திகள்

நாகையில் கர்நாடகா வாகனங்கள் ஸ்டிக்கர் ஒட்டி இயக்கம்

Published On 2016-09-13 13:17 IST   |   Update On 2016-09-13 13:17:00 IST
காவிரி பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடைபெற்று வருவதால், நாகை மாவட்டத்திற்கு வரும் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு போலீசார் ஸ்டிக்கர் ஒட்டி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி நாகூர் மற்றும் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், வேதாரண்யம் ஆகிய இடங்களில் உள்ள மும்மத வழிபாட்டு ஸ்தலங்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

கர்நாடகாவில் காவிரி நீர்பிரச்சினை காரணமாக பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் நாகை மாவட்டம் சீர்காழியில் கர்நாடகா லாரியின் கண்ணாடியை சிலர் உடைத்து சேதப்படுத்தினர். இதே போல் வைத்தீஸ்வரன் கோவிலில் கர்நாடகா பதிவு எண் கொண்ட ஜீப் கண்ணாடியை சிலர் உடைத்துவிட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.

இதை தொடர்ந்து நாகை மாவட்டத்திற்கு வரும் கர்நாடகா வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். நேற்று நாகை வந்த கர்நாடகா வாகனங்களில் போலீசார் ஸ்டிக்கர் ஒட்டி கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனம் என்பதை மறைத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கர்நாடக வாகனங்களில் வந்த சிலர் அதில் செல்ல அச்சம் அடைந்ததால் அவர்கள் வந்த வாகனங்கள் நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில் வந்தவர்கள் பஸ் மற்றும் வாகனங்கள் மூலம் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு போய் உள்ளனர். அவர்கள் பதட்ட நிலை குறைந்ததும் தங்களது வாகனங்களை எடுத்துசெல்வதாக கூறி சென்றுள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று நடந்த வன்முறையால் தமிழக லாரிகள் பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதே போல் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு வரும் கர்நாடகா வாகனங்களுக்கும் பாதுகாப்பு வழங்க போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

Similar News