செய்திகள்

சத்தியமங்கலம் அருகே ஆசிரியர் வீட்டில் ரூ. 35 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

Published On 2016-09-12 17:02 IST   |   Update On 2016-09-12 17:02:00 IST
சத்தியமங்கலம் அருகே ஆசிரியர் வீட்டில் ரூ. 35 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜோசப் (வயது 64). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி ஜோஸ்பின் மேரி (60). இவர்களுக்கு கிறிஸ்டோபர் (30) என்ற மகனும் ரோஸ்லின் என்ற மகளும் உள்ளனர்.

கிறிஸ்டோபர் அமெரிக்காவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் வந்திருந்த இவர் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். இவரை வழி அனுப்புவதற்காக தந்தை ஜோசப், தாயார் ஜோஸ்பின் மேரி மற்றும் தங்கை ரோஸ்லின் ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றனர்.

அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். இதன்பிறகு அங்கு பீரோவில் இருந்த 65 பவுன் நகை, ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ.35 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இந்த கொள்ளை பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் சத்தியமங்கலம் துணை சூப்பிரண்டு மோகன், ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

கொள்ளையர்களை பிடிப்பதற்காக 10 பேர் கொண்ட போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது, இவர்கள் திருப்பூர், கோவை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் தபால் நிலைய வீதியில் நடந்து சென்ற வியாபாரியிடம் ரூ.5¾ லட்சம்பணம் கொள்ளை யடிக்கப்பட்டது.

இந்த குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில் இப்போது ஆசிரியர் வீட்டில் ரூ. 35 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News