செய்திகள்

சிங்கம்புணரியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

Published On 2016-09-08 14:48 IST   |   Update On 2016-09-08 14:49:00 IST
சிங்கம்புணரியில் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் நகையை பறித்த கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
சிங்கம்புணரி:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மாதவன் நகரைச் சேர்ந்தவர் விஜயா (வயது23). இவர் தினமும் அதிகாலையில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம்.

அதன்படி இன்று காலை தனது தந்தையுடன் விஜயா நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது கர்ச்சிப்பால் முகத்தை மூடிக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென விஜயா கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்தனர்.

தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பினர். அப்போது விஜயா திருடன்.. திருடன்... என கூச்சலிட்டார். அப்போது அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்களை விரட்டினர்.

சிங்கம்புணரி-மதுரை சாலையில் சென்றபோது கொள்ளையர்களை மடக்கி பிடித்து சிங்கம்புணரி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரை திருநகரைச் சேர்ந்த சுப்பையா மகன் சுரேஷ் (19), திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மாசாணம் மகன் கார்த்திக் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News