செய்திகள்

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து ராணுவ வீரர் பலி

Published On 2016-09-07 12:37 IST   |   Update On 2016-09-07 12:38:00 IST
ஈரோடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உடல் நசுங்கி ராணுவ வீரர் பலியானார்
ஈரோடு:

கரூர் மாவட்டம் வேங்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 37). பஞ்சாப்பில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார்.

இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பிறகு பணிக்கு செல்ல கரூரிலிருந்து ரெயிலில் புறப்பட்டார்.

இந்த ரெயில் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. சிறிது நேரம் நின்று அந்த ரெயில் புறப்பட்டு சென்றது. ராணுவ வீரர் ராஜேந்திரன் ரெயில் படிக்கட்டில் நின்றபடி சென்றதாக கூறப்படுகிறது. ரெயில் சென்று கொண்டிருந்த போது திடீரென 3 மற்றும் 4-வது பிளாட்பார்முக்கு இடையே தண்டவாளத்தில் தவறி விழுந்து விட்டார்.

இதில் ரெயில் அவர் மீது ஏறியதில் ராஜேந்திரன் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தால் ஈரோடு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு ரெயில்வே போலீசார் ராஜேந்திரன் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

ரெயில் மோதி பலியான ராணுவ வீரர் ராஜேந்திரனுக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், கவனீஸ்குமார் என்ற ஒரு மகனும், காயத்ரி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

Similar News