செய்திகள்

தேவகோட்டையில் பூசாரி மர்மச்சாவு - போலீசார் விசாரணை

Published On 2016-08-30 17:28 IST   |   Update On 2016-08-30 17:28:00 IST
தேவகோட்டையில் நண்பர் வீட்டு முன்பு கோவில் பூசாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சரசுவதி வாசக சாலை தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் கணேசன் (வயது45). இவர் அங்குள்ள முனியய்யா கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

நேற்று இரவு 7 மணியளவில் கணேசன் வீட்டில் இருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர் சுல்தான் வந்து அழைத்துள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அதன்பிறகு நீண்ட நேரமாகியும் கணேசன் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சுல்தான் வீட்டு முன்பு அவர் மயங்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது கணேசன் பேச்சு மூச்சற்று கிடந்தார். அவரை உடனடியாக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

இது குறித்து கணேசனின் மகள் காளியம்மாள் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது தந்தை சாவில் மர்மம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கணேசனின் நண்பர் சுல்தானிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News