செய்திகள்
ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்த படம்.

போதுமான பயிற்சியின்மையே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாததற்கு காரணம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Published On 2016-08-22 10:00 IST   |   Update On 2016-08-22 10:00:00 IST
போதுமான பயிற்சி இல்லாத காரணத்தாலேயே இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் அதிக பதக்கங்களை வெல்ல முடியாததற்கு காரணம் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல மொழிகள் பேசும் நாட்டில் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை ஆபத்தான பல விளைவுகளை ஏற்படுத்தும். ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற இந்துத்துவக் கொள்கையையே இந்தக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

ஏற்கனவே உயர்கல்வியில் 90 சதவிகிதமும், பள்ளிக்கல்வியில் 50 சதவிகிதமும் தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. முழுக்க முழுக்க தனியார்மயமாக்குவதையே இந்த கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. மேலும், மாநில உரிமைகளையும் இது பறிப்பதாக உள்ளது. எனவே, இந்த கல்வி கொள்கை முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் மக்கள் பிரச்சனையை ஆளுங்கட்சி முன்வைப்பது இல்லை. எதிர்கட்சி விவாதிப்பதில்லை. ஆனால், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் நீக்கியிருப்பது முற்றிலும் ஜனநாயக விரோதம்.

திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தில் தொடரும் மர்மக் காய்ச்சலைத் தடுப்பதற்கு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகளை தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒலிம்பிக்கில் இரண்டு பெண்கள் பதக்கங்களை வென்று பட்டியலில் இடம் பெற செய்து இருப்பது பெருமையளிக்கிறது. அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுத் துறையில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை. போதுமான பயிற்சி இல்லாத காரணத்தாலேயே இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் அதிக பதக்கங்களை வெல்ல முடியாததற்கு காரணம். வருங்காலங்களில் இத்தகைய குறைகள் களையப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News