புதுக்கோட்டை-அரியலூரில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்ற அரசு ஊழியர்கள்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்கநாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர், நல்லிணக்கநாள் உறுதிமொழியான ‘நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுப்பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல் பேச்சு வார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும், இதனால் உறுதியளிக்கிறேன்” என வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் நல்லிணக்கநாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு ) மீரா பரமேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி மத நல்லிணக்க நாள் உறுதிமொழி கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பூமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், அலுவலக மேலாளர்கள் வைத்தியநாதன் (பொது), முத்துலெட்சுமி (குற்றவியல்) உள்பட வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.