செய்திகள்

புதுக்கோட்டை அருகே டிராக்டர் டயரில் சிக்கி ஊராட்சி செயலர் பலி

Published On 2016-08-14 17:21 IST   |   Update On 2016-08-14 17:21:00 IST
புதுக்கோட்டை அருகே திருமணமான 2 மாதத்தில் ஊராட்சி செயலர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவரங்குளம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள சூத்தியன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவர் கைக்குறிச்சி ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று சுரேஷ் மோட்டார் சைக்கிளில் அரசடிப்பட்டி நால் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் டிராக்டர் ஒன்று சென்றது. திடீரென நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள், டிராக்டரின் பின்புறம் மோதியது. இதில் தவறி கீழே விழுந்த சுரேஷின் தலையில் டிராக்டரின் டயர் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான சுரேஷின் தந்தை கணேசன் புதுக்கோட்டை விடுதி ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். திருமணமான 2 மாதத்தில் சுரேஷ் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News