சீர்காழியில் சாலையோர மரங்களை வெட்டி கடத்த முயற்சி 2 டிராக்டர்கள் பறிமுதல்
சீர்காழி:
சீர்காழி ஈசானிய தெருவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களை நேற்று மாலை சிலர் அனுமதியின்றி வெட்டி எடுத்து செல்வதாக சீர்காழி தாசில்தார் மலர்விழிக்கு தகவல் வந்துள்ளது.
இதன் பேரில் தாசில்தார் மலர்விழி மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது சிலர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோரம் இருந்த தூங்குமூஞ்சி மரங்களை வெட்டி 2 டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் டிராக்டர்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் 2 டிராக்டரிகளிலும் சுமார் 10 டன் அளவிற்கு மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டி எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து மரங்களுடன் 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த தாசில்தார் மலர்விழி அதனை சீர்காழி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.