மயிலாடுதுறை அருகே காதல் ஜோடி விஷம் குடித்தது: காதலி பலி
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி ஈஸ்வரர் தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் கலைவாணன் (25). நெல் அறுவடை எந்திர டிரைவர்.
அதே பகுதியை சேர்ந்தவர் ராமையன். இவரது மகள் நிவேதா (24). பி.இ. பட்டதாரி. ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. அவர்கள் நீ என்ஜினீயரிங் படித்தவர். கலைவாணன் சாதாரண டிரைவர் என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் கலைவாணன் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் காதல் ஜோடி மனம் உடைந்தது.அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று மதியம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள தோப்பிற்கு சென்றனர். அங்கு இருவரும் விஷம் குடித்தனர். இதில் மயங்கி விழுந்தனர். இதனை அந்த வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து இருவரையும் 108 ஆம்புலன்சில் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் நிவேதாவை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். காதலன் கலைவாணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நிவேதாவின் பெற்றோர் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தனர். அதில் தனது மகளுக்கு விஷத்தை ஊற்றி கொடுத்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து செம்பனார் கோவில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் ஆறுபாதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.