செய்திகள்

கோட்டைப்பட்டினத்தில் 4-வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்: ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு

Published On 2016-07-23 09:31 IST   |   Update On 2016-07-23 09:31:00 IST
கோட்டைப்பட்டினத்தில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தினமும் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து சுமார் 250 விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர் களது படகுகளை விடுவிக்க வேண்டும், மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு அரசு வழங்கும் மானிய விலையிலான டீசல் அளவை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந்தேதி முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தினமும் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சங்கத்தினர் கூறும் போது, இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் தமிழகத்தில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு மத்திய மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். எங்களது போராட்டம் காரணமாக தினமும் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மீன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News