செய்திகள்

தொழிலதிபர் மனைவி உள்பட 4 பேரிடம் 42 பவுன் நகை பறிப்பு

Published On 2016-07-22 17:42 IST   |   Update On 2016-07-22 17:42:00 IST
திருச்சி அருகே அடுத்தடுத்து நடந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கீரனூர்:

புதுக்கோட்டை–திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீரனூரை சேர்ந்தவர் கருப்பையா. பிரபல தொழிலதிபரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவரது மனைவி இந்திரா. கீரனூர் அருகே உள்ள தாகினிப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். நேற்று மாலை இந்திரா மற்றும் அவரது வீட்டில் வேலை பார்க்கும் பாப்பா (வயது 40) என்பவரை துணைக்கு அழைத்துக் கொண்டு புதுக்கோட்டையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றார்.

சாமி தரிசனம் முடித்து விட்டு இரவு பஸ் மூலம் கீரனூருக்கு புறப்பட்டார். தாகினிப்பட்டி செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் இறங்கி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மோட் டார் சைக்கிளிலில் 3 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இந்திராணியை வழி மறித்து அவரது கழுத்தில் கிடந்த 25 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இந்தி ராணி திருடன், திருடன் என கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்களும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து மறைந்தனர்.

இது குறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் இந்தி ராணி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் அருள்மொழி அரசு, சப்–இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், மற்றும் போலீசார் டேவிட் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதே போல் கீரனூர் அருகே உள்ள சென்னையங்குடி பகுதியைச் சேர்ந்த சாந்தி தலைமையாசிரியர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் அவரை வழி மறித்து அவரிடமிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.

இதேபோல் கீரனூர் சிவன் கோவில் பகுதியில் மைனா, தமிழரசி இருவரிடமும் 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். கீரனூர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த நகை பறிப்பு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News