செய்திகள்

போலீஸ் தொந்தரவு செய்வதாக கூறி கலெக்டர் அலுவலக வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

Published On 2016-07-20 17:05 IST   |   Update On 2016-07-20 17:05:00 IST
போலீஸ் தொந்தரவு செய்வதாக கூறி மாவட்ட கலெக்டர் அலுவலக வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த மணிக்கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது35). திருப்பூரில் வேலை பார்த்து வரும் இவர், மனு கொடுப்பதற்காக தன் மனைவி நாகலட்சுமியுடன் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்ததுக்கு வந்தார்.

நாகலட்சுமியை அலுவலகத்தின் கீழ்தளத்தில் விட்டுவிட்டு, கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு இளங்கோவன் சென்றுள்ளார். ஆனால், கலெக்டர் அலுவலகத்தின் மேல் தளத்தின் மாடியில் அமைக்கப்பட்டுள்ள வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி, உச்சிக்கு சென்ற இளங்கோவன், அங்கு இருந்து தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியுள்ளார். உடனே, நாகலெட்சமி அலறியடித்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நாகப்பட்டினம் தீயணைப்பு நிலையம், நாகூர் போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி, அவரைப்பிடித்தனர். லேசான மயக்கத்தில் இருந்த இளங்கோவனை கீழே கொண்டு வந்து, ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

“திருப்பூரில் மனைவியுடன் திருந்தி வாழும் என்னை, செம்பனார் கோவில், திருவெண்காடு, பொறையாறு ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார் இருசக்கர வாகன திருட்டு வழக்குகளுக்காக அடிக்கடி வந்து விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

நான் தற்போது திருந்தி வாழ்கிறேன் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் தற்கொலைக்கு முயன்றேன்” என இளங்கோவன் தெரிவித்தார்.

Similar News