செய்திகள்

கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2016-06-04 16:08 IST   |   Update On 2016-06-04 16:08:00 IST
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரேணுகா (வயது 19). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார்.

இவரும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். ஆனந்தராஜ் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு தனியார் பஸ்சில் கண்டக்டராக உள்ளார்.

இவர்களது காதல் விவகாரம் ரேணுகா வீட்டுக்கு தெரியவந்தது. அவர்கள் ரேணுகாவை கண்டித்தனர். இதுகுறித்து ரேணுகா ஆனந்தராஜிடம் தெரிவித்தார். எனக்கு நல்ல வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆனந்தராஜ் தெரிவித்தார்.

ஆனால் ரேணுகா வீட்டிற்கு போக மறுத்து இப்போதே திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினார். இதையடுத்து இருவரும் மே 9-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் மகளை காணவில்லை என ரேணுகாவின் தந்தை ராஜேந்திரன் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த ஆனந்தராஜ், ரேணுகாவும் இன்று கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

Similar News