உள்ளூர் செய்திகள்

கோவையில் ஒரே நாளில் 12-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி

Published On 2023-04-13 09:14 GMT   |   Update On 2023-04-13 09:14 GMT
  • பரத் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு கிணற்றில் குளிக்க சென்றார்.
  • பரத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கோவை,

கோவை சூலூர் அருகே உள்ள வரப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் பரத் (வயது 18). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

சம்பவத்தன்று பரத் தனது நண்பர்களான சரவணன், கிருஷ்ணன் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக வெளியே சென்றார். விளையாடி முடித்ததும் பரத் நண்பர்களுடன் சின்னவதம்பசேரியில் உள்ள வெள்ளியங்கிரி என்பவரது தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றனர். ஜாலியாக குளித்து கொண்டு இருந்த போது பரத் திடீரென நீரில் மூழ்கினார்். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து அவரது தந்தை வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனது மகனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிணத்துக்கடவு அருகே உள்ள சொளவம்பாளையத்தை சேர்ந்தவர் வீரன். இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (18). இவரும் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் மயிலேரிபாளையத்தில் உள்ள மலையான் குட்டையில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் குளித்துக்கொண்டு இருந்த போது திடீரென கோகுல கிருஷ்ணன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நீரில் மூழ்கி இறந்த கோகுலகிருஷ்ணனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News