புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'
- போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நாகை அவுரித்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
- நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நாகை அவுரித்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இப்பேரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது.
மேலும் இந்த பேரணியில் நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி நடுநிலை பள்ளியை சேர்ந்த 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் கை பதாகைகள் வைத்து மாணவர்கள், மற்றும் காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் தியாகராஜன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.டி.அன்பழகன், ஆண்டனி பிரபு, மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கொண்ட குழுவினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் இரண்டு வெவ்வேறு கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை கைப்பற்றி அந்த இரண்டு கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் சீல் வைத்து கடையை மூடினர்.
இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.