உள்ளூர் செய்திகள்

செங்காத்தாகுளம் அருகே மினி லாரி மோதி விபத்து - 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

Published On 2022-12-27 20:34 IST   |   Update On 2022-12-27 20:34:00 IST
  • கொத்தனார் வேலைக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
  • அப்போது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை ஊராட்சி, செங்காத்தா குளம் கிராமம், அருந்ததியர் காலனி, மாத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சூர்யா(27), கொத்தனாராக பணியாற்றி வருகிறார்.

ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கொத்தனாராக பணியாற்றி வரும் இவரது நண்பர் சுதாகர் (26), என்பவரும் நேற்று முன்தினம் இரவு கொத்தனார் வேலைக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

பெரியபாளையம் அருகே செங்காத்தாகுளம்- ஏனம்பாக்கம் ரோட்டில் செங்காத்தாகுளம் அருகே வந்தபோது எதிரே வந்த மினி லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சூர்யா மற்றும் சுதாகர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

அருகிலிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவான டிரைவரை வலை வீசி தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News