உள்ளூர் செய்திகள்

நடவு செய்யப்பட்ட நிலம் நீரின்றி காய்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

இசா பெரிய ஏரி வறண்டதால் வடலூர் பகுதியில் 1500 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு : என்.எல்.சி. சுரங்க நீரும் நிறுத்தம்

Published On 2023-10-21 08:11 GMT   |   Update On 2023-10-21 08:11 GMT
  • மற்ற போகங்களில் எள், மணிலா பயிரையும் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்,
  • வசாயிகள் சுரங்க நீரை பயன்படுத்தி 2 போகம் நெல் பயிர் செய்தனர்.

கடலூர்:

வடலூர் அருகே உள்ள கருங்குழி, மேலகொளக்குடி, கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி உள்ள 260 ஏக்கர் பரப்பில் இசா பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீராதாரமாக ஊத்தங்கால், வெள்ளூர், ஊமங்கலம், உள்ளிட்ட கிராமங்களின் மழை நீர் வடிகால் மூலமாக வரும். இதனால் நிரம்பும் ஏரியின் உபரி நீர் நாட்டேரி என்கிற வாலாஜா ஏரியின் மூலமாக, பெருமாள் ஏரி வழி சென்று கடலூர் கடலில் கலக்கும்,மழை காலங்களில் நிரம்பும் நீரைக் கொண்டு, மேலக்கொளக்குடி, கருங்குழி உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்து 500 ஏக்கரில் ஒருபோகம் சம்பா நெல் பயிரும், மற்ற போகங்களில் எள், மணிலா பயிரையும் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்,என்.எல்.சி.யில் 2-வது சுரங்கம் அமைக்கப்பட்ட பின்பு, நீர் வரத்துக்கான வழிகள் தடைபட்டது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர், நீர்வரத்துக்கான ஆதாரங்களாக மாறி, கோடைக்காலங்களில் விவசாயத்திற்கு ஆதாரமாகவும், மழைகாலங்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து, கருங்குழி, கொளக்குடி, நைனார்குப்பம், மருவாய், ஓணான்குப்பம், திருவெண்ணை நல்லூர், பாதிரிமேடு, கல்குணம் விவசாய நிலங்கள் மூழ்கும் அபாய நிலை தொடர்ந்தது. இருந்தபோதும் விவசாயிகள் சுரங்க நீரை பயன்படுத்தி 2 போகம் நெல் பயிர் செய்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக என்எல்சி நிறுவனம் நிறுவனத்தின் மூலம் வெளியேற்றப்படும், தண்ணீர் இந்த ஏரியில் விடாததால், சம்பா பயிர்களையும், குருவை பயிர்களையும் முறையாக செய்ய முடியாமல் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இயற்கையாக கிடைக்கும் மழைநீரால், ஏரி நிரம்ப வழியும் இல்லை, என்.எல்.சி. கழிவுகளால் ஏரியும் தூர்ந்து மேடாகிபோனது. மழையும் இல்லை, தண்ணீரும் இல்லை, இதனால் சம்பா நெல் பயிரிட்ட விவசாய நிலம் காய்ந்து கரம்பாக கிடக்கிறது, இதனால் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த விஷயத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும். தூர்ந்து போன ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்தவேண்டும். ஏரிக்கு நீர் கிடைக்க வழி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயத்திற்கு 'தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழி செய்யுமா? விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News