கவுண்டம்பாளையத்தில் இன்று காலை ஒர்க்ஷாப்பில் நின்ற 14 கார்கள் எரிந்து நாசம்
- சுமார் 1.30 மணி நேர போராட்டத்துக்கு பின் 8.45 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
- இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுண்டம்பாளையம்,
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள அசோக்நகரில் தனியார் ஒர்க்ஷாப் ஒன்று உள்ளது. இந்த ஒர்க்ஷாப்பில் 4 சக்கர வாகனங்களுக்கான டிங்கரிங் மற்றும் பெயிண்டிங் வேலைகள் செய்து கொடுக்கப்பட்டு வந்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒர்க் ஷாப்புக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் ஒர்க்ஷாப் மூடியே கிடந்தது.
இந்தநிலையில் இன்று காலை ஒர்க்ஷாப்பில் இருந்து திடீரென புகை வந்தது. நேரம் ஆக, ஆக அங்கிருந்து வெளியேறிய புகை அந்த பகுதி முழுவதையும் புகை மூட்டமாக்கியது.
இதுபற்றி அந்த பகுதியினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்றனர்.
ஒர்க்ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 கார்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. காலை 7.15 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் பணியை தொடங்கி தீயை அணைக்க போராடினர். சுமார் 1.30 மணி நேர போராட்டத்துக்கு பின் 8.45 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருந்தாலும் அங்கு நின்ற 14 கார்களும் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு தீப்பிடித்ததா அல்லது பட்டாசு எதாவது பறந்து தீப்பிடிக்க காரணமாக அமைந்ததா என்பது பற்றி போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.