உள்ளூர் செய்திகள்

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2024-12-06 10:20 IST   |   Update On 2024-12-06 10:20:00 IST
  • இன்று மாலை விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது.
  • 7 டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்க ஏற்பாடு.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவில்.

இந்த கோவிலில் கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வந்தன.

தற்போது திருப்பணிகள் நிறைவு பெற்று வர்ணங்கள் தீட்டப்பட்டு கோவில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான விழா இன்று மாலை தொடங்குகிறது.

இன்று மாலை விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து விழா நாட்களில் யாக சாலை பூஜைகள், நவக்கிரக ஹோமம், திருமுறை பாராயணம், பூர்ணாகுதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 12-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் நடக்கிறது. அன்று 9.15 மணிக்கு மாசாணியம்மன் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 9.30 மணிக்கு மாசாணியம்மன் மூல ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மகாதீபாராதனை நடக்கிறது.


கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலில் யாக சாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

12-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் முடிந்ததும் 7 டிரோன்கள் மூலம் பக்தர்கள் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.

பக்தர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள், 3 ஆம்புலன்சுகள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வர வசதியாக இன்று முதலே ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் கோவை, பொள்ளாச்சி, உடுமலை உளளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News