உள்ளூர் செய்திகள்

காயங்களுடன் இறந்து கிடந்த 10 ஆடுகள்

Published On 2023-07-05 08:20 GMT   |   Update On 2023-07-05 08:20 GMT
  • நேற்று முன்தினம் இரவு அமுதா ஆடுகளை கொட்டகைக்குள் கட்டி வைத்தார்.
  • மர்மநபர்கள் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அமுதா (வயது 70).

வீட்டில் தனியாக வசித்து வரும் இவர் பிழைப்புகாக தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார்.

இவரிடம் 10 ஆடுகள் இருந்தன.

பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் அமுதா மாலை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்குள் ஆடுகளை கட்டி வைப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு அமுதா ஆடுகளை கொட்டகைக்குள் கட்டி வைத்தார்.

நேற்று காலை வழக்கம் போல் வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுக் கொட்டகைக்கு சென்ற போது அங்கு கழுத்து முறிந்து ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் 10 ஆடுகளும் இறந்து கிடந்தன.

இதைக்கண்டு அமுதா கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆடுகள் எப்படி இறந்தது? ஆடுகள் அனைத்தும் கட்டப்பட்ட நிலையிலும் இறந்து கிடப்பதால் இது எப்படி நடந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர்.

மேலும் தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

10 ஆடுகளையும் மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது ஆடுகள் சாவுக்கு காரணம் என்ன? முன்விரோத செயலா? என என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News