உள்ளூர் செய்திகள்

10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற பைபர் படகு மீனவர்கள்

Published On 2024-05-27 03:49 GMT   |   Update On 2024-05-27 03:49 GMT
  • புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது.
  • பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

வேதாரண்யம்:

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் கடலில் பலத்த காற்று வீசும் மற்றும் கடல் சீற்றமாக காணப்படும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது.

அதேபோல், நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் குறைந்த தூரம் சென்று மீன்பிடிக்கும் பைபர் படகுகளும் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.10 லட்சம் மீன் வர்த்தகம் தடைபட்டது. மேலும், பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆறுகாட்டுத்துறை பகுதியில் நேற்று கடல் சீற்றம் தணிந்ததால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

குறைந்த தூரத்திற்கு சென்று மீன்பிடித்து கரை திரும்பும் இந்த பைபர் படகு மீனவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்கள் சிக்கினாலும், மீன்பிடி தடைக்காலம் என்பதால் அந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றுள்ளனர்.

Tags:    

Similar News