செய்திகள்

ரஜினி மகளுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்பநல நீதிமன்றம்

Published On 2017-07-04 18:44 IST   |   Update On 2017-07-04 18:44:00 IST
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா-அஸ்வின் தம்பதியருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர், கோச்சடையான், கோவா ஆகிய படங்களை தயாரித்துள்ளார். சவுந்தர்யாவுக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும், அவரது கணவர் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் இனி சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்து விவாகரத்து பெற முடிவு செய்தனர்.

இதற்காக, அவர்கள் சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி மரியா முன்பு கடந்த ஜூன் 23-ந்தேதி விசாரணைக்கு வந்தது.



அப்போது சவுந்தர்யாவும், அஸ்வினும் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களிடம் பரஸ்பரம் விவாகரத்து பெறப் போகிறீர்களா? இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். ஆனால், அவர்கள் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக கூறினர்.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சவுந்தர்யா-அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கப்படுவதாகவும், அவர்களின் திருமணம் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார். இந்து திருமண சட்டத்தின்படி 6 மாத அவகாசத்திற்குப் பின் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

Similar News