செய்திகள்
இந்தியாவில் மூன்று லட்சம் ஏஎம்டி மாடல்களை விற்பனை செய்த மாருதி சுசுகி
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான ஏஎம்டி வசதி கொண்ட மாடல்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான ஏஎம்டி (AMT) வசதி கொண்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
2014-ம் ஆண்டு மாருதி சுசுகி அறிமுகம் செய்த மாருதி செலரியோ மாடலில் முதல் முறையாக ஏஎம்டி தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. தற்சமயம் வரை மாருதி சுசுகி நிறுவனம் ஏழு மாடல்களில் ஏஎம்டி வசதியை வழங்குகிறது.
மாருதி சுசுகி ஆல்டோ K10, வேகன்ஆர், செலரியோ, ஸ்விஃப்ட், இக்னிஸ், டிசையர் மற்றும் சமீபத்தில் அறிமுகமான விடாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களில் மாருதி ஏஎம்டி வசதியை வழங்குகிறது.
கோப்பு படம்
ஏஎம்டி கியர்பாக்ஸ் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இதுவரை விற்பனையானதில் சுமார் 43 சதவிகித செலரியோ மாடல்கள் ஏஎம்டி வசதி கொண்டிருக்கிறது. இதேபோன்று இக்னிஸ் மற்றும் டிசையர் மாடல்களில் முறையே 28 சதவிகிதம் மற்றும் 17 சதவிகிதம் ஏஎம்டி வசதி கொண்ட மாடல்கள் ஆகும்.
இத்துடன் 2014-15 ஆண்டுடன் ஒப்பிடும் போது ஏஎம்டி மாடல்கள் அறிமுகமானதில் இருந்து மாருதி சுசுகியின் மொத்த விற்பனை 2017-18 நிதியாண்டு காலக்கட்டத்தில் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. 2018-19 நிதியாண்டு காலக்கட்டத்தில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஏஎம்டி மாடல்களை விற்பனை செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது முதல், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு இதர நிறுவனங்களும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கி வருகின்றன. அந்த வகையில் டாடா, மஹேந்திரா, ரெனால்ட் மற்றும் நிசான் உள்ளிட்டவை தங்களது மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்குகின்றன.