ஐ.பி.எல்.(IPL)
ஊத்தங்கரை தொகுதி

அதிமுக ஹாட்ரிக் படைக்குமா?- ஊத்தங்கரை தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-24 13:40 IST   |   Update On 2021-03-24 13:40:00 IST
இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்று, தொகுதியை கையில் வைத்திருக்கும் அதிமுகவும்- திமுக கூட்டணியில் காங்கிரஸும் நேருக்குநேர் மோதும் ஊத்தங்கரை தொகுதி கண்ணோட்டம்
அதிமுக சார்பில் டி.எம். தமிழ்செல்வம், காங்கிரஸ் சார்பில் ஜே.எஸ். ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் கே. முருகேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் த. இளங்கோவன், தேமுதிக சார்பிலா் பாக்கியராஜ் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் டி.எம். தமிழ்செல்வம் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 5,00,000
2. அசையும் சொத்து- ரூ. 24,96,040
3. அசையா சொத்து- ரூ. 15,00,000

காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எஸ். ஆறுமுகம் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 16,00,000
2. அசையும் சொத்து- ரூ. 32,87,702
3. அசையா சொத்து- ரூ. 1,07,40,000

தமிழகத்தின் 72-வது சட்டமன்ற தொகுதியான ஊத்தங்கரை தொகுதி (தனி) உள்ளது. இத்தொகுதியில் ஊத்தங்கரை ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள், ஊத்தங்கரை பேரூராட்சி, மத்தூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகள், பர்கூர் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகள் என 62 ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் அடங்கியுள்ளது.

ஊத்தங்கரை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 20 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 975 பேர் உள்ளனர். மற்றவர்கள் 56 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 51 பேர் உள்ளனர்.

இங்கு பெரும்பான்மை சமூகமாக தலித்கள் சுமார் 22 சதவீத மக்கள் வசிக்கின்றனர். அடுத்தபடியாக வன்னியர், வெள்ளாளக்கவுண்டர், முஸ்லீம், செட்டியார், முதலியார், அருந்ததியர் என பரவலாக அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர்.

இந்த தொகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் மட்டுமே உள்ளதால் அதிகளவில் கூலி வேலை மட்டுமே இருக்கிறது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் கல்லூரிகள் சில இயங்கி வருவதால் குறிப்பிடத்தக்க வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.



ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் கொண்டம்பட்டி, மூன்றம்பட்டி, மிட்டப்பள்ளி, ரெட்டிப்பட்டி, சிங்காரப் பேட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு பாம்பாறு அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் குடிநீர் பிரச்சினை தீர்ந்து வருவதோடு 4000-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனால் விவசாயம் ஓரளவிற்கு நடைபெற்று வருகிறது. மேலும் பாம்பாறு அணைக்கு வரும் வாய்க்கால்களையும், ஆக்கரமிப்புகளையும் அகற்றினால் மேலும் பலநூறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து ஊத்தங்கரை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் வளர்ச்சி அடையாமல் உள்ளதால் மக்களிடையே ஒருவித எதிர்பார்ப்பு வரும் தேர்தலில் மக்களிடையே இருப்பது தெளிவாக தெரிகிறது.
மேலும் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மகளிர் காவல் நிலையம், அனுமந்தீர்த்தம் ஆஞ்சநேயர் கோயில், எட்டிப்பட்டி தூவல் நீர்வீழ்ச்சி, அங்குத்தி சுணை ஆகியவற்றை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுதவிர படித்த இளைஞர்களுக்குவேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.



ஆரம்பத்தில் ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் சட்டசபை தொகுதியின் கீழ் இருந்தது. அப்போது முதல் முறையாக 1952-ம் ஆண்டு இந்த தொகுதி தேர்தலை சந்தித்தது.கடந்த 1971-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின் கீழ் அரூர் சட்டசபை தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு ஊத்தங்கரை தொகுதி புதிதாக உதயமானது. அதன்பிறகு 1977-ம் ஆண்டு ஊத்தங்கரை தொகுதி நீக்கப்பட்டு புதிதாக பர்கூர் சட்டசபை தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில் இருந்த பகுதிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி பர்கூர் சட்டசபை தொகுதியிலும், மற்றொரு பகுதி அரூர் (தனி) தொகுதியிலும் சேர்க்கப்பட்டது. 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஊத்தங்கரை (தனி) தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு உதயமானது.

கடந்த 2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பக்கு பின் மீண்டும் ஊத்தங்கரை (தனி) தொகுதி உருவாக்கப்பட்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக மனோரஞ்சிதம் நாகராஜன் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஊத்தங்கரை தொகுதி கொம்மபட்டு கிராமத்தை சேர்ந்த கே.இ.கிருஷ்ணமூர்த்தி பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

2011- மனோ ரஞ்சிதம் நாகராஜ்- அ..தி.மு.க.
2016- மனோரஞ்சிதம் நாகராஜ்- அ.தி.மு.க.

Similar News