செய்திகள்
பூவை ஜெகன்மூர்த்தியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்த காட்சி.

தமிழகத்தின் முன்னேற்றம் தான் அதிமுக கூட்டணியின் இலக்கு- அன்புமணி பிரசாரம்

Published On 2021-03-24 07:51 GMT   |   Update On 2021-03-24 07:51 GMT
நாம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுக்கு வரவேண்டும். நம்முடைய இலக்கு தமிழகத்தின் முன்னேற்றம். அதை நாம் அடைவோம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியை ஆதரித்து, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

‘‘சமூக நீதி அடிப்படையில் நமது கூட்டணி இருக்கிறது. நமது 40 ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தவர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதை நாம் மறக்கக் கூடாது.

வன்னியர்களை போன்று இன்னும் பல சமுதாயத்தினர் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் தனித்தனியாக இட ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும். பா.ம.க., புரட்சி பாரதம் கட்சியின் கொள்கையும் சமூக நீதிதான்.

நாம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுக்கு வரவேண்டும். நம்முடைய இலக்கு தமிழகத்தின் முன்னேற்றம். அதை நாம் அடைவோம். அதற்கு ஒரு படி தான் இந்த கூட்டணி. இது பலமான கூட்டணி.

இந்த ஆட்சி பெண்களுக்கு அமைதி தரும் ஆட்சி. கொரோனா காலத்தில் 10 மாதங்களாக நான் உங்களை பார்க்க முடியவில்லை. இப்போது வந்திருக்கிறேன். நானும் உங்களோடு துள்ளிக்குதிக்க ஆசையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News