ஐ.பி.எல்.(IPL)
தோப்பு வெங்கடாச்சலம்

பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் தோப்பு வெங்கடாச்சலம்

Published On 2021-03-18 09:34 IST   |   Update On 2021-03-18 09:34:00 IST
தோப்பு வெங்கடாச்சலம் கடந்த 2012-ம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ஈரோடு:

பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்த தொகுதியின் எம்.எல்.ஏ., வாக இருந்து வருகிறார்.

கடந்த 2012-ம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இந்த நிலையில் பெருந்துறை தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்தார். மீண்டும் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார்.

ஆனால் அவருக்கு சீட் கொடுக்காமல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவருக்கு அ.தி.மு.க.வில் சீட் வழங்கப்பட்டது. இதனால் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி தோப்பு வெங்கடாச்சலம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தான் பெருந்துறை தொகுதிக்கு கொண்டு வந்த நலத்திட்ட உதவிகளை பற்றியும், தான் கட்சிக்காக உழைத்தது பற்றியும் எடுத்து கூறினார். மேலும் கட்சி தான் முக்கியம் என்றார். மேலும் என் செயல்பாட்டில் என்ன குறைகளை கண்டது கட்சி தலைமை. ஏன் எனக்கு 2021-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றார். எனக்கு சீட் தரவில்லை என்றாலும் வருத்தம் இல்லை என்றார். அப்போது தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் ஆதரவாளர்கள் கண் கலங்கினர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தோப்பு வெங்கடாச்சலம் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். அப்போது கடந்த 10 ஆண்டுகளில் பெருந்துறை தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால், பொதுமக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். எனவே சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

ஆதரவாளர்களின் வலியுறுத்தல் காரணமாகவும் கடந்த 10 ஆண்டுகளாக தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து உள்ளதாலும் பெருந்துறை தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதால் சுயேட்சையாக போட்டியிட போவதாக தோப்பு வெங்கடாச்சலம் அறிவித்தார்.

இதையடுத்து தோப்பு வெங்கடாச்சலம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதற்காக தொகுதி முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுயேட்சையாக போட்டியிட்டு தங்களது பலத்தை தலைமைக்கு காட்ட வேண்டும் என்று ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

Similar News