அரசியல்வாதிகளை காப்பாற்றவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - முத்தரசன்
திருத்துறைப்பூண்டி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரி பாசன மாவட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயு, ஷேல் கேஸ் அதிகம் இருப்பதாகவும், அதனை எடுப்பதில் அரசு கொள்கையில் தங்களை மாற்றிக் கொள்ளாது என்றும் மத்திய அமைச்சர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இதில் மாநில அரசு தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது. கோவில்களில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. வெளிநாடுகளில் இருந்த சிலைகள் மீட்கப்பட்டது. அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் கடத்தலில் ஈடுட்டுள்ளதை கண்டுபிடித்து பலர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவரை செயல் படவிடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதில் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையே.
மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் தூர் வாரும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. இதனால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சேலம் 8 வழிச்சாலையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். எனவே உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.