செய்திகள்

அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் கவர்னர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Published On 2018-08-03 07:00 GMT   |   Update On 2018-08-03 07:00 GMT
அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து கவர்னர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். #AnbumaniRamadoss #PMK
சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் மகளிர் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது.

அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளியும், பதிவாளர் சுகந்தியும் அப்பதவிகளுக்கு தகுதியற்றவர்கள். ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் தான் இவர்களுக்கு இந்த பதவிகள் கிடைத்தன. இவர்களின் ஊழல்களுக்கு துணையாக இருக்கும் பொருளாதாரத்துறை பேராசிரியர்கள் கலைமதி, சுந்தரி ஆகிய இருவரும் ஓய்வு பெற்ற பின்னரும் தேவையின்றி இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

துணைவேந்தர், பதிவாளர் ஆகிய இருவரையும் பொம்மையாக வைத்துக் கொண்டு இவர்கள் இருவரும் தான் சென்னையிலும், கொடைக்கானலிலும் இருந்தவாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை ஆட்டிப் படைக்கின்றனர்.

பதவி உயர்வு முதல் பணியிட மாற்றம் வரை இவர்கள் இருவருக்கும் பணம் கொடுத்தால் மட்டுமே நடக்கும். துணைவேந்தர் மற்றும் அவரது ஆலோசகர் கையூட்டு வாங்கிக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் உள்ள விரிவாக்க மையங்களுக்கு பணியிட மாற்றம் வழங்குவதுடன், அவர்களுக்கு விதிகளை மீறி மலைப் பணி படி, குளிர்காலப்படி ஆகியவற்றையும் வழங்கி பல்கலைக்கழகத்துக்கு இழப்பை ஏற்படுத்துகின்றனர்.



அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்பட்ட செட் தேர்வில் தேர்ச்சி வழங்குவதற்காக ஏராளமானோரிடமிருந்து தலா ரூ. 6 லட்சம் கையூட்டு வாங்கப்பட்டதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திலும் ஊழல்கள் நடந்துள்ளன. ரூசா எனப்படும் தேசிய உயர்கல்வி திட்டப்படி பல்கலைக்கழக வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட நிதியிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இவை குறித்து அரசிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

ஆளுனர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட புகார் மனுக்களும் குப்பையில் வீசப்பட்டுவிட்டன. பல மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வரும் ஆளுனர், அதற்கு பதிலாக பல்கலைக்கழகங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

முதல்கட்டமாக அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து, அங்கு நடந்துள்ள ஊழல்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #AnbumaniRamadoss #PMK
Tags:    

Similar News