நீட் தேர்வு வினாத்தாளில் தமிழ் மொழிபெயர்ப்பில் தவறு கிடையாது - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
தஞ்சாவூர்:
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகமும், அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவையும் இணைந்து நடத்திய ‘‘தமிழ் சங்கமம்’’ (இந்திய தமிழ்ச் சங்கங்களின் மாநாடு) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் அவர் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பு மாநாடு தஞ்சையில் இன்று நடந்தது. இந்தியாவில் இருக்கும் 50 சங்கங்களின் நிகழ்வாக 3 நாட்கள் மாநாடு நடை பெறுகிறது.
உலக தமிழ் சங்கங்களின் உறுப்பினர் சார்ந்த அமைப்பாக இது உருமாற்றப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் உள்ள 150-க்கும் மேற்பட்ட நல்ல தமிழ் சங்கங்கள், இந்தியாவில் உள்ள 200 தமிழ் சங்கங்கள், உலகம் முழுவதும் உள்ள 100 சங்கங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து நிறுவன ரீதியாக உறுப்பினர்களை மதுரையில் உள்ள தமிழ் சங்கத்துக்கு தர இருக்கிறோம்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உலக தமிழ் சங்கங்களை உருமாற்றம் தற்போது நடந்து வருகிறது. இதற்கு செயற்குழு, பொதுக் குழு உருவாக்கம் செய்து உருமாற்றப்படுகிறது. இதற்கென ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘தெற்குவை’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்பெயர்ப்பில் தவறு என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளாரே? என்று நிரூபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளத்த அமைச்சர் பாண்டியராஜன் ‘‘நீட் தேர்வு தமிழில் வினாத்தாள் மொழி பெயர்ப்பு சரியாக உள்ளது. சி.பி.எஸ்.இ. மீது தான் தவறு உள்ளது’ என்றார்.
பேட்டியின் போது தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் உடன் இருந்தார்.