செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதி நாளை விசாரணை

Published On 2018-07-22 08:44 GMT   |   Update On 2018-07-22 08:44 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை நாளை முதல் நீதிபதி விசாரிக்க உள்ளார். முதல் நாள் 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் ராமன் வாதம் செய்ய உள்ளார். #18MLAs #MLAsDisqualification
சென்னை:

முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், வெற்றிவேல், தங்க தமிழச்செல்வன் உள்பட 18 பேர் கடந்த ஆண்டு மனு கொடுத்தனர்.

இதையடுத்து இந்த 18 பேரையும் தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் செய்து கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 18ந்தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாசரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த 14ந் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

இதையடுத்து இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சத்திய நாராயணனை, சுப்ரீம் கோர்ட்டு நியமித்து உத்தரவிட்டது.



இதையடுத்து இந்த வழக்கை கடந்த 4 ந்தேதி விசாரணைக்கு எடுத்த நீதிபதி சத்தியநாராயணன், 23-ந்தேதி முதல் தினந்தோறும் 5 நாட்கள் விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி இந்த வழக்கை நாளை முதல் நீதிபதி விசாரிக்க உள்ளார். முதல் நாள் 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் ராமன் வாதம் செய்ய உள்ளார். #18MLAs  #MLAsDisqualification
Tags:    

Similar News