செய்திகள்

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர முதலமைச்சர் உத்தரவு

Published On 2017-08-30 16:10 IST   |   Update On 2017-08-30 16:10:00 IST
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 22–ந்தேதி மாலை வெற்றிவேல் எம்.எல்.ஏ. தவிர 18 எம்.எல்.ஏ.க்கள் புதுவை சின்னவீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு வந்து தங்கினர். 3 நாட்கள் மட்டுமே அவர்கள் தங்கி இருந்த நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த சுற்றுலா பயணிகளுக்காக அந்த விடுதியை காலி செய்து கொண்டு கடந்த 25–ந்தேதி புதுவை 100 அடி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறைகள் எடுத்து தங்கினர்.

ஒரு வார காலமாகியும், கவர்னர் வித்யாசாகர் ராவ், தங்கள் தரப்பு கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் இருக்கும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் விரைவில் டெல்லிக்கு அழைத்துச் செல்ல தினகரன்  திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

நாளை காலை 10 மணி முதல் மாவட்ட வாரியாக எம்.எல்.ஏக்களை சந்திக்கிறார். அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

Similar News