செய்திகள்

தினகரனும் பொதுக்குழுவை கூட்டுவார்: திவாகரன் பேட்டி

Published On 2017-08-30 07:44 GMT   |   Update On 2017-08-30 07:44 GMT
ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். அணியினர் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை. அவர்கள் அப்படி கூட்டினால் பொது செயலாளர் அனுமதி பெற்று தினகரனும் பொதுக்குழுவை கூட்டுவார் என்று திவாகரன் கூறினார்.

கூத்தாநல்லூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. அம்மா அணி பொது செயலாளர் சசிகலா சகோதரர் திவாகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் பலம் குறைந்துள்ளதால் எடப்பாடி அரசு மெஜாரிட்டி இழந்துள்ளது. இந்த அரசு நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. இதில் கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நேர்மையான உயர் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். இதில் கவர்னர் தலையிட வேண்டும்.

ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். அணியினர் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை. அவர்கள் அப்படி கூட்டினால் பொது செயலாளர் அனுமதி பெற்று தினகரனும் பொதுக்குழுவை கூட்டுவார்.


சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை திரும்ப பெற முடியாது. எடப்பாடி கூட்டும் பொதுக்குழுவிற்கு அழைப்பு வந்தால் எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களை அனுப்பி வைப்போம்.

பெரும்பான்மையை இழந்து விட்டதாக அனைத்து கட்சியினரும் கூறி வரும் நிலையில் கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஊழல் அமைச்சர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்க கூடாது.

தலித் ஒருவரை முதல்-அமைச்சர் ஆக்குவதற்கு இதுதான் சரியான தருணம். இதற்கு எதிர் கட்சிகள் ஆதரவு தர வேண்டும். நீங்கள், உங்கள் மகனால் தான் இந்த அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது என உயர் அதிகாரி ஒருவர் எனது போனில் வந்து மிரட்டினார்.

வக்கீலுடன் ஆலோசித்து அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு திவாகரன் கூறினார்.

Tags:    

Similar News