செய்திகள்

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. மக்கள் சக்தியாக தொடர வேண்டும்: நடிகை லதா

Published On 2016-12-17 07:45 GMT   |   Update On 2016-12-17 10:57 GMT
எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. மக்கள் சக்தியாக தொடர வேண்டும் என்று நடிகை லதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
சென்னை:

நடிகை லதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், லட்சோபலட்சம் தொண்டர்களுக்கு என் அன்புகலந்த பணிவான வணக்கங்கள்.

என் குரு, என் ஆசான், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாகிய அ.தி.மு.க. ஆரம்பிக்கும் பொழுது உடனிருந்து கட்சி நிதிக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுத்தவள் நான் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

கட்சியின் மூத்த பொறுப்பாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் என்னுடைய பணிவான வேண்டுகோள் இது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை அவருக்குபின் எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து ஒரு இரும்புக் கோட்டையாக ராணுவக்கட்டுப்பாட்டுடன் வளர்த்து இந்தியாவின் 3-வது பெரிய கட்சியாக வளர்வதற்கு கடும்முயற்சி செய்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா.

அவரது கனவு ‘‘எனக்குப் பின்னும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமானது இதே போன்று முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து மக்கள் சக்தியாக இருக்க வேண்டும்’’ என்பதாகும். இதனை அவரே சட்டமன்ற கூட்டத்தில் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். அதனை நிறைவேற்றுவது நமது கடமையாகும்.

எனவே, கழகத்தின் மூத்த நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுபட்டு, கட்சியின் கட்டுக்கோப்பு மாறாமல் பொதுமக்களும் ஏற்கும் விதமாக ஒரு நல்ல முடிவினை எடுக்க வேண்டும். புரட்சித் தலைவி அம்மா வழிநடந்து தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என மீண்டும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு லதா கூறியுள்ளார்.

Similar News