லைஃப்ஸ்டைல்

எதற்கெல்லாம் தனிநபர் கடன் கூடாது?

Published On 2019-04-06 03:18 GMT   |   Update On 2019-04-06 03:18 GMT
பலரையும் கவரும் கவர்ச்சிகரமான கடனாக தனிநபர் கடன் உள்ளது. எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது.
எந்தவித ‘செக்யூரிட்டி’யும் கோராமல் வழங்கப்படுவது என்பதால், பலரையும் கவரும் கவர்ச்சிகரமான கடனாக தனிநபர் கடன் உள்ளது.

மருத்துவச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றுக்குப் பணம் தேவை என்னும்போது உடனடியாக கை கொடுப்பது தனிநபர் கடன் ஆகும். இதற்கான வட்டி விகிதமும் 10 முதல் 13 சதவீதம் என்பது மிகவும் அதிகம் என்றாலும், அவசியமாகத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

ஆனால், எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது. அவை பற்றி...

தனிநபர் கடனாகப் பெற்ற பணத்தை பங்குச் சந்தை அல்லது பிற ‘ரிஸ்க்’கான முதலீடுகளில் போடாதீர்கள். அவை போன்ற ரிஸ்க்கான திட்டங்கள் லாபம் அளிக்காமல் முதலீடு செய்ததை விடக் குறைவான மதிப்புக்குச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.

வாகனம் வாங்க அல்லது அதுபோன்ற பிற செலவுகளுக்கு தனிநபர் கடன் வாங்க வேண்டாம். தனிநபர் கடன் எந்த ஓர் உத்தரவாதமும் இல்லாமல் அளிக்கப்படுவதால் வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க எல்லாம் தனிநபர் கடனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.

உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்க வேண்டும் என்பதற்காகவும் தனிநபர் கடன் வாங்க வேண்டாம். இன்றைய சூழலில் பல நிறு வனங்கள் தங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக வட்டியில்லாத ஈ.எம்.ஐ. சேவைகளை எல்லாம் வழங்குகின்றன.

பிறரின் தேவைக்காகக் கடன் பெற்று கொடுத்துவிட்டு அவர்கள் சரியான நேரத்தில் உங்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கவில்லை என்றால் அதனால் உங்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும். அதுமட்டும் அல்லாமல், நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும்போது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வேறு எந்தக் கடனும் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

தொழில் தொடங்க தனிநபர் கடன் பெற வேண்டாம். தனிநபர் கடனை தவிர்த்து தொழில் துவங்க அரசு பலவகைகளிலும் கடன் அளித்து உதவி செய்கிறது. புதியதாகத் துவங்கும் ஒரு தொழிலில் உடனே வருவாய் பெற்றுக் கடனை திருப்பிச் செலுத்திவிடலாம் என்பதும் முடியாத காரியம் ஆகும். எனவே தனிநபர் கடன் என்பது அவசரத் தேவையின்போது உங்களுக்கு உதவ மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Tags:    

Similar News