பெண்கள் உலகம்

பெண்களுக்கு அலட்சியத்தால் ஏற்படும் தொப்பை

Published On 2023-10-29 08:01 GMT   |   Update On 2023-10-29 08:01 GMT
  • சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள்.
  • பிரசவத்திற்கு பின் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.

பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். சிசேரியன் செய்த பிறகு உடல் இயக்கமின்றி அதிக நேரம் படுக்கையில் இருப்பது தொப்பை உண்டாக காரணமாகிவிடுகிறது.

மேலும் வயிற்றில் இருந்த குழந்தையின் வெற்றிடத்தில் காற்று நிரம்புவதாலும், வயிற்றில் கொழுப்பு சேருவதாலும் தொப்பை ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். பிரசவத்திற்கு பின் வயிற்றில் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.

 அந்த காலத்தில் பிரசவத்திற்கு பின்பு பெண்களின் வயிற்றில் இறுக்கமாக, துண்டை கட்டி வைப்பார்கள். கால்களையும் சேர்த்து அமரச்சொல்வார்கள். இதன் மூலம், தளர்வான பிறப்புறுப்பின் வழியே காற்று உட்செல்வது தடுக்கப்பட்டு, எத்தனை குழந்தைகள் பெற்றெடுத்தாலும் வயிறு ஒட்டிய நிலையில் அக்கால தாய்மார்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் தவிர்த்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தொப்பை, உடல் பருமன் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் சோர்வும், அதனால் ஏற்படும் பசியும் உண்ணும் உணவின் அளவை அதிகப்படுத்திவிடும்.

தாய்ப்பால் கொடுப்பதற்காக சத்தான உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வேண்டியிருக்கும். அந்த உணவுகளாலும் உடல் எடை கூடும். குழந்தை பிறந்து ஒரு ஆண்டை கடந்த பிறகோ, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகோ உடல் பருமனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட வேண்டும்.

சரியான உணவுப்பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு அவசியம் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளும், யோகாசனங்களும் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் உடல் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்துவர வேண்டும். அதில் அலட்சியம் காண்பிக்கக்கூடாது.

ஏனெனில் குழந்தை ஒரு வயதை தாண்டிய பின்னரும் எடை குறைப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால் தோற்றப் பொலிவில் மாறுதல் உண்டாகிவிடும். பின்னர் பழைய தோற்றத்திற்கு திரும்புவது கடினமான விஷயமாகிவிடும்.

இப்போது வயது வித்தியாசமின்றி பலரும் தொப்பை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதும் தொப்பைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இனிப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட இனிப்பு பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதும் தொப்பைக்கு வித்திடும். கார்போஹைட்ரேட் அதிகம் கலந்த உணவுகள், புரதம், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் சாப்பிடுவதாலும் தொப்பை ஏற்படக்கூடும். பெண்களுக்கு தொப்பை அதிகம் இருந்தால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரக்கூடும். தொப்பை உருவாகுவதற்கு முதன்மை காரணம் கொழுப்புதான். தண்ணீருக்கு பதிலாக அவ்வப்போது வெந்நீர் பருகுவது தொப்பையை கரைக்க உதவும்.

Tags:    

Similar News