அழகுக் குறிப்புகள்

கண்கள் அழகாக தெரிய வீட்டிலேயே என்னவெல்லாம் செய்யலாம்...

Published On 2022-07-27 05:52 GMT   |   Update On 2022-07-27 05:52 GMT
  • ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • ஐ மேக்கப்பை இரவில் முழுமையாக நீக்கி விட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும்.

கண்ணுக்கு மட்டும்தான் உள்ளத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் குணம் இருக்கு. அதனால கண் எப்பவுமே ஸ்பெஷல்தான். இதை இன்னும் ஸ்பெஷலாக்க, ஒவ்வொரு பாகமாகப் பிரித்துப் பிரித்து வீட்டிலேயே என்னவெல்லாம் செய்யலாம்னு பார்க்கலாம்.

கண், புருவம்: தலையில் பொடுகு இருந்தால், அது உதிரும்போது புருவமுடிகளின் இடையில் சிக்கிக்கொள்ளும். இதேபோல முக பவுடர், தூசு போன்றவையும் புருவங்களில் சிக்கிவிடும். இதைச் சுத்தம் செய்யாதபட்சத்தில், இயற்கையாக அடர்ந்த புருவம் உள்ளவர்களுக்குக்கூட நாளடைவில் முடிகள் உதிர்ந்து, புருவம் மெல்லியதாகிவிடும். இதைத் தவிர்க்க, தினமும் குளிக்கும்போது விரல் நகங்களால் புருவத்தை மென்மையாக சுரண்டிவிட்டு, பின் சோப்பு போட்டு அலசுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

தரமான ஐபுரோ பென்சிலை வாங்கி, ஒரு டப்பாவில் கொஞ்சம் விளக்கெண்ணைய் ஊற்றி, அதற்குள் ஐபுரோ பென்சிலின் நுனி மூழ்கியிருக்குமாறு வைக்க வேண்டும். தினமும் இரவு, புருவ முடி வளர்ந்துள்ள திசையிலேயே, இந்த பென்சிலைக் கொண்டு அழுத்தமாக வரைந்து, மறுநாள் காலையில் கழுவிவிட வேண்டும். ஐபுரோ பென்சிலில் உள்ள லனொலின் மற்றும் விளக்கெண்ணெய் இவை இரண்டும் இணைந்து, மெல்லிய புருவங்களை அடர்த்தியாக்கவும், உதிர்ந்த புருவ முடியை திரும்ப வளரவைக்கவும் உதவும்.

குறிப்பு: தினமும் புருவத்துக்கு ஐபுரோ பென்சில் போடும்போது, முடிகளில் மட்டும் இல்லாமல், சருமத்திலும் மை பட்டு, சருமத் துவாரங்கள் அடைத்துக்கொள்ளும். இதற்கு காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும் டிரான்ஸ்பரன்ட் மஸ்காராவை ஐபுரோவின் மேல் போட்டால், முடியைத் தவிர சருமத்தில் பட்டுள்ள மையை நீக்கிவிடும்.

இமை முடி: ஐஸ்க்ரீம் செய்யத் தேவைப்படும் ஜெலட்டினை (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்) பத்து நிமிடம் சுடு தண்ணீரில் போட்டால், ஜெல் போல் மாறிவிடும். இதில் பத்து கிராம் எடுத்து, இதனுடன் விளக்கெண்ணெய் ஒரு பத்து கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் இந்தக் கலவையை காட்டனில் தொட்டு கண்களில் ஒற்றி எடுத்து, பத்து நிமிடங்கள் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். இதை, தொடர்ந்து செய்தால், இமையில் முடிகள் வளர்வதுடன் கண்களும் பிரகாசமாக ஒளிரும்.

கண் இமைகளின் மேல்தோலில் கருமையும், சுருக்கமும் ஏற்படுவதைத் தடுக்க ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஐ மேக்கப் போட வேண்டிய கட்டாயம் இருந்தால், இரவு அதை முழுமையா அலசிவிட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும்.

கருவளையம்: கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும். கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம். இதுவே கருப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.

Tags:    

Similar News