அழகுக் குறிப்புகள்

இயற்கையான பொருட்களைக் கொண்டு சருமத்தை 'பிளீச்சிங்' செய்யலாம்

Published On 2023-05-19 04:46 GMT   |   Update On 2023-05-19 04:46 GMT
  • ஆரஞ்சு தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு உடனடியான மினுமினுப்பைத் தரக்கூடியது.
  • மாசு, வெயிலால் ஏற்படும் கருமையை இயற்கை பொருட்களைக்கொண்டு நீக்கும் முறையே ‘பிளீச்சிங்’.

அதிகப்படியான வெயில், மாசு போன்றவற்றால் சருமம் கருத்து பொலிவு இழந்து போகும். இந்தக் கருமையை, சில பொருட்களைக்கொண்டு நீக்கும் பராமரிப்பு முறையே 'பிளீச்சிங்' எனப்படுகிறது. எந்த விதமான ரசாயனமும் பயன்படுத்தாமல், எளிதாக கிடைக்கும் இயற்கையானப் பொருட்களைப் பயன்படுத்தி கருமையை நீக்கி, சரும நிறத்தை பழையபடி கொண்டு வர முடியும். அதைப்பற்றி பார்க்கலாம்.

கடலை மாவு பிளீச்

கடலை மாவு - 2 தேக்கரண்டி

கோதுமை மாவு - 1 தேக்கரண்டி

தயிர் - 2 தேக்கரண்டி

பாதாம் - 5

எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி

சிறிய பாத்திரத்தில் கடலை மாவு, கோதுமை மாவு, பொடியாக்கப்பட்ட பாதாம், தயிர், எலுமிச்சம் பழச்சாறு இவை அனைத்தையும் கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். சிறிது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து முகம் முழுவதும் சுத்தப்படுத்தவும். பின்பு ஊறவைத்த கடலை மாவு கலவையை பூசி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

புளி

ரசாயனக் கலவை கலந்த பிளீச்சிங் பொருட்களுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக புளி இருக்கிறது. இது சருமத்துக்கு உடனடியான பொலிவைத் தரக்கூடியது.

புளி - ஒரு எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

அரிசி மாவு - 1 தேக்கரண்டி

தேன் - 1 தேக்கரண்டி

எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

ரோஜா பன்னீர், தண்ணீர் - தேவையான அளவு

வெந்நீரில் புளியை ஊறவைத்து அதன் சாற்றை கெட்டியாக பிழிந்தெடுத்துக்கொள்ளவும். பிழிந்த சாறில் அரிசி மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை ரோஜா பன்னீர் கொண்டு நன்றாகத் துடைத்த பின்பு, புளி கலவையை முகம் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோலில் உள்ள 'வைட்டமின் சி' சருமத்தில் உள்ள கரும்புள்ளி, சீரற்ற நிறத்தை நீக்கி பொலிவுடன் வைக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு உடனடியான மினுமினுப்பைத் தரக்கூடியது.

ஆரஞ்சு தோல் பொடி - 2 தேக்கரண்டி

வால்நட் பொடி - 1 தேக்கரண்டி

சந்தனத் தூள் - 1 தேக்கரண்டி

வெள்ளரிச் சாறு - 5 தேக்கரண்டி

சிறிய பாத்திரத்தில் ஆரஞ்சு தோல் பொடி, வால்நட் பொடி, சந்தனத் தூள் மற்றும் வெள்ளரிச் சாறு என அனைத்தையும் நன்றாகக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை வெள்ளரிச் சாறு கொண்டு துடைத்த பின்பு, ஆரஞ்சு தோல் பிளீச்சிங் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை ஆரஞ்சு தோல் பிளீச்சிங் செய்யலாம்.

Tags:    

Similar News