லைஃப்ஸ்டைல்
உங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்

உங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்

Published On 2020-11-27 07:11 GMT   |   Update On 2020-11-27 07:39 GMT
சரியான புள்ளிகளில் மசாஜ் செய்யப்படும்போதுதான் ரத்தம் புத்துணர்வு பெற்று தேகமெங்கும் அழகு படர அனுமதிக்கும். எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொண்டால், இளமையை பாதுகாக்கலாம்.
இளமையை அப்படியே தக்க வைக்க மிக சிறந்த வழிகளில் ஒன்றுதான் ஆயில் மசாஜ்கள். இப்போது ஆயில் மசாஜ் என்றால் கேரளா செல்ல வேண்டாம். அதற்கென கேரளாவே தமிழகம் வந்திருக்கிறது. அதாவது பல கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் தமிழகம் எங்கும் கிளை பரப்பி உள்ளன. அதுமட்டும் இல்லாமல் ஸ்பா சிகிச்சையிலும் எண்ணெய் மசாஜ்கள் தரப்படுகின்றன. நிறைய அழகு நிலையங்கள் தற்போது இந்த ஆயில் மசாஜ்களில் ஈடுபட்டுள்ளன.

தரமான மற்றும் சரியான மசாஜ் மையத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் ஆரோக்யம் மற்றும் அழகு பாதுகாக்கப்படும். சரியான புள்ளிகளில் மசாஜ் செய்யப்படும்போதுதான் ரத்தம் புத்துணர்வு பெற்று தேகமெங்கும் அழகு படர அனுமதிக்கும்.

திருமணம் வரை அழகை பரமரிக்கும் பெண்களால், அதன் பிறகு குழந்தை, குடும்பம் என இவற்றில் கவனம் செல்ல, சரும பாதுகாப்பு என்பது இல்லாமல் போய் விடுகிறது. சருமம் கடினமாக மாறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், இது முதுமையின் அடையாளம்.
இதற்கு, முக்கிய காரணம் உண்ணும் உணவு முறைகள் தான். இப்படி வாழ்க்கை ஒருபுறம் போக, மனதில் இளமையை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொண்டால், இளமையை பாதுகாக்கலாம். என்னென்ன எண்ணெய்களால் மசாஜ் செய்யலாம்?

திராட்சை எண்ணெய்: இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளது. ஆகவே, சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். அது மட்டுமல்லாமல், திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால், சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால், நாளடைவில் மறைந்து விடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள், இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி, இளமை நிலைக்கும்.

அவகோடா எண்ணெய்: நமது உடலில் சருமம் தளர்ந்து காணப்படுவதற்கு காரணம், உடலில் இருக்கும் கொலாஜெனின் உற்பத்தி குறைவாக இருப்பதுதான். ஆனால் இந்த அவகோடா எண்ணெயில் இருக்கும், ஒமேகா 3 பேட்டி ஆசிட் அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து, தளர்ச்சியை குறைத்து விடும். ஆகவே இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், சருமம் இறுக்கமடைந்து முகத்தில் சருமத்துளைகள் அதிகம் காணப்பட்டாலும், அவற்றை விரைவில் போக்கி விடும்.

நல்லெண்ணெய்: மசாஜ்க்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ், பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால், எந்த ஒரு பிரச்னையும் வராது. இந்த எண்ணெய், சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும்.

ஆலிவ் எண்ணெய்: எண்ணெய் வகைகளில் மிகச்சிறந்த எண்ணெய், ஆலிவ் எண்ணெய். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஓமேகா பேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக, இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது, எண்ணெயை எக்காரணம் கொண்டும் சூடேற்றக்கூடாது. அவ்வாறு சூடேற்றினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். ஆயில் மஜாஜ் செய்து, உங்கள் இளமையை தக்க வைத்துக்கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. முதுமைக்கு குட்பை சொல்ல, ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்.
Tags:    

Similar News