லைஃப்ஸ்டைல்
மழைக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

மழைக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

Published On 2020-09-23 03:56 GMT   |   Update On 2020-09-23 03:56 GMT
மழைக்காலங்களில்தான் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். அந்த சமயத்தில் சருமத்தை சரியாக கவனித்துக்கொள்ளாவிட்டால் சரும நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும்.
மழைக்காலம் மனதுக்கு இனிமையாக அமைந்தாலும் சருமத்திற்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில் ஈரப்பதமான காலநிலை சரும செல்களுக்கு ஒத்துக்கொள்ளாது. மற்ற பருவக்காலங்களை விட மழைக்காலங்களில்தான் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். அந்த சமயத்தில் சருமத்தை சரியாக கவனித்துக்கொள்ளாவிட்டால் சரும நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும்.

நிறைய பேர் மழை காலத்தில் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள் காரணமாக முகப்பருக்கள், தோல் அழற்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்வார்கள். அதனை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

* பெண்கள் மழைக்காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதில்லை. இருண்ட மேகங்களுக்கு பின்னால் சூரியன் மறைந்திருக்கும் என்றாலும், புற ஊதாக்கதிர்வீச்சுகளின் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். அக்கதிர்வீச்சுகள் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனினும் கோடை காலம் போல் அதன் வீரியம் இருக்காது என்பதால் மழைக்காலத்தில் சன்ஸ்கிரீனை அதிகம் பயன்படுத்தக்கூடாது.

* மழைக்காலத்தில் குடிநீர் பருகுவதை குறைத்தால் அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்ந்த காலநிலை நிலவும் என்பதால் தண்ணீர் தாகம் எடுக்காது. அதற்காக தண்ணீர் பருகாமல் இருக்கக்கூடாது. ஏனெனில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். அதை ஈடுகட்ட தண்ணீர் பருக வேண்டியது அவசியமானது. அது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.

* மழை நீரில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் அதில் படியும் அழுக்குகள் சரும துளைகளை அடைத்துவிடக்கூடும். அப்படியிருக்கையில் மேக்கப் செய்வது அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முகப்பரு பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு மேக்கப் தேவையில்லை. ஈரப்பதத்தன்மை கொண்ட சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தி சரும துளைகளை அடைக்காமல் பாதுகாக்கலாம்.

* மழைக்காலத்தில் நிறைய பேர் முகம் கழுவு வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் முகம் கழுவாவிட்டால் சருமத்தில் அழுக்குகள் தேங்கிவிடும். அதனால் சரும எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மழைக்காலத்தில் மூலிகை தன்மை கொண்ட பேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்துவது சிறப்பானது.

* கோடை காலத்தை போலவே மழைக்காலத்திலும் சரும செல்கள் உதிரத்தொடங்கும். அழுக்குகள், இறந்த செல் அடுக்குகளை அப்புறப்படுத்த இது அவசியமானது. இல்லாவிட்டால் சரும துளைகள் அடைப்பட்டுவிடும். சரும நோய்த்தொற்றுகளும் உண்டாகும்.
Tags:    

Similar News