லைஃப்ஸ்டைல்
எல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளுமா?

எல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளுமா?

Published On 2020-08-08 06:44 GMT   |   Update On 2020-08-08 06:44 GMT
எல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளாது. அது சிலருக்கு சருமத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களை குறைக்கலாம்.
சூரியனிடம் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்திற்கும், உடல் பாகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனை தவிர்க்க சருமத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்குவது அவசியம். ஏனெனில் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குவது முன்கூட்டியே வயதான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். சரும புற்றுநோய் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய ஆபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு சன்ஸ்கிரீன் உபயோகமாக இருக்கும். ஆனால் எல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளாது. அது சிலருக்கு சருமத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

சன்ஸ்கிரீனில் சேர்க்கப்படும் ரசாயனக்கலவைதான் பக்கவிளைவுகளுக்கு காரணமாக அமையும். புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தோல் பகுதியை சுற்றி பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது மிருதுதன்மை வாய்ந்த சருமம் கொண்டவர்களை பாதிக்கும். ஆனால் சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களை குறைக்கலாம்.

* எல்லா நேரமும் சன்ஸ்கிரீனை குறைவான அளவில்தான் உபயோகிக்க வேண்டும். குறைந்த அளவைக்கொண்டே வெயில் படும் அனைத்து பாகங்களிலும் தடவிவிட வேண்டும்.

* சன்ஸ்கிரீனை பூசிக்கொண்ட உடனே வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும்.

* உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியாகிக்கொண்டிருந்தால் ஐந்து மணி நேரம் கழித்து மீண்டும் சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும்.

* முகப்பரு பாதிப்புக்கு ஆளானவர்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடலாம். ஏனெனில் அது முகப்பருவின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும். அவர்கள் எண்ணெய் பசை இல்லாத அழகு சாதன பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். அதுபோல் உடலில் காயம், தடிப்பு உள்ளிட்ட சரும பிரச்சினைகள் இருந்தாலும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கக்கூடாது.

* சன்ஸ்கிரீனில் இருக்கும் ரசாயனங்கள் சிலருடைய சருமத்தை கடுமையாக பாதிக்கும். சருமம் சிவத்தல், வீக்கம், அரிப்பு, தடிப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். வாசனை திரவியங்களை உள்ளடக்கிய சன்ஸ்கிரீன்கள் சிலருக்கு ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தும். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு தோல் மருத்து வரிடம் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

* கண்களுக்கு அருகே சன்ஸ்கிரீனை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்களில் எரிச்சல், அரிப்பு, வெளிச்சத்தை பார்த்தால் கண் கூச்சம் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும். சன்ஸ்கிரீனில் ரசாயனத்தன்மை அதிகம் இருந்தால் கண் பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளாகுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

* சன்ஸ்கிரீனில் உள்ள சில பொருட்கள் மார்பக செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* குழந்தைகளின் சருமம் மிருதுவானது என்பதால் சன்ஸ்கிரீன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் குழந்தைகளுக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

* சன்ஸ்கிரீனை பயன்படுத்தியதும் சருமத்தில் கொப்பளங்கள், வலி, தடிப்புகள் போன்ற அறிகுறிகள் சிலருக்கு தோன்றும். அவர்கள் சன்ஸ்கீரினை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Tags:    

Similar News