பெண்கள் உலகம்
பெண்களே பியூட்டி பார்லர் போறீங்களா?

பெண்களே பியூட்டி பார்லர் போறீங்களா?- இத எடுத்துட்டு போக மறக்காதீங்க

Published On 2020-06-03 09:50 IST   |   Update On 2020-06-03 09:50:00 IST
அழகு நிலையங்களை (பியூட்டி பார்லர்)திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி அழகு நிலையத்திற்கு செல்லும் பெண்கள் இதை எல்லாம் எடுத்துக்கொண்டு போக மறந்து விடக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
அழகு நிலையங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அழகு நிலையங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி சலூன், அழகு நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களின் முழு விவரத்தையும் சேகரிக்குமாறு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அறிவுரைகள்:-

* அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் நுழை வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்தகரிப்பானை (Hand Sanitizer) நுழை வாயிலில் வைக்க வேண்டும்.

* சலூன்கள், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்.

* பணியாளர்கள் தங்களது கைகளை துடைப்பதற்காக பேப்பர் நாப்கின் வைக்கப்படுவதோடு, அவைகள் பயன்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

* அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளரும், பணியாளர்களும் கட்டாயம் முக கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும்.

* அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அடிக்கடி தங்களது மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

* அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களில் குளிர் சாதன இயந்திரங்கள் அல்லது காற்று குளிரூட்டும் இயந்திரங்கள் ஏற்கெனவே இருப்பின் அவற்றை பயன்படுத்தக்கூடாது.

வாடிக்கையாளருக்கான அறிவுரைகள்:-

* அழகு நிலையம் மற்றும் ஸ்பாவிற்குள் நுழையும் முன்னரும், வெளியே செல்லும் முன்னரும் அனைத்து வாடிக்கையாளர்களும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது சுத்தகரிப்பானை (Hand Sanitizer) கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

* அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

கண்காணித்தல்

இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் அனைத்து அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் உள்ளவற்றை அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்கள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணிப்பதோடு வாடிக்கையாளர்களும், அரசின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இந்த அறிவுரைகளை அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்கள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

Similar News