பெண்கள் உலகம்

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் முருங்கை

Published On 2018-07-17 07:52 IST   |   Update On 2018-07-17 07:52:00 IST
முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும்.
சமையலில் இடம்பிடிக்கும் முருங்கை இலை, சரும பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும். முருங்கை இலை எண்ணெய்யும் முகப்பருக்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது. சரும வறட்சி, சரும சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முருங்கை எண்ணெய், முருங்கை பவுடர் நிவாரணம் தரும்.

முருங்கை பவுடரை பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் சரும சுருக்கங்கள் மறைய தொடங்கும். கரும்புள்ளிகள் இருந்தாலும் அவையும் நீங்கிவிடும். உதடுகளில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும் முருங்கை எண்ணெய்யை பயன்படுத்தி வரலாம்.

சரும பொலிவை மேம்படுத்தவும் முருங்கை இலைகளை பயன்படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து முகத்தில் பூசி வந்தால் முக அழகு கூடும். சருமத்தில் ஏற்படும் நிற மாற்றமும் மறையதொடங்கும். முருங்கை இலை பேஸ்டை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்.

முதலில் முருங்கை இலைகளை வெயிலில் உலர்த்தி பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன், பன்னீர் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகத்தில் பூசி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் காட்டன் துணியால் முகத்தை துடைத்துவிட்டு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவடையும். 
Tags:    

Similar News