பொது மருத்துவம்

தலைவலி எதனால் ஏற்படுகிறது...? இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன....?

Published On 2024-03-27 06:50 GMT   |   Update On 2024-03-27 06:50 GMT
  • வீக்கமடைந்த தலை நரம்புகள் தான் தலைவலியை உண்டாக்குகின்றன.
  • டென்ஷன் தலைவலி தான் நிறைய பேருக்கு இருக்கிறது.

எரிச்சலடைந்த, சினமடைந்த, சேதமடைந்த, வீக்கமடைந்த தலை நரம்புகள் தான் தலைவலியை உண்டாக்குகின்றன. சுமார் 150-க்கும் மேலான தலைவலி வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான தலைவலிகள் ஆபத்தானதல்ல. ஆனால், சில தலைவலிகள் நமது உடலிலுள்ள மிகப்பெரிய பிரச்சினைகளினால் வருவதாக இருக்கலாம்.

டென்ஷன் தலைவலி:

இந்த வகை தலைவலி தான் அதிகமாக நிறைய பேருக்கு இருக்கிறது.

 கடுமையான ஒற்றைத் தலைவலி:

இதைத்தான் `மைக்ரேன்' என்று மருத்துவ மொழியில் சொல்வதுண்டு. தினம் தினம் புதுப்புது பிரச்சினைகளினால் உண்டாகும் தலைவலி. பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கலந்துள்ள நைட்ரேட் பொருள், மதுவகைகளில் குறிப்பாக சிவப்பு ஒயின், சிகரெட்டிலுள்ள நிகோட்டின், கட்டுப்பாடில்லாத ரத்த அழுத்த நோய், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், கண் பார்வை பிரச்சினை உள்ளவர்கள், நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், உடலில் அதிக நீரிழப்பு ஏற்பட்டவர்கள், சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள், போதுமான நேரம் தூங்காதவர்கள், எந்நேரமும் கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன், டி.வி. உபயோகிப்பவர்கள், கண் பார்வை குறைபாட்டிற்கு கண்ணாடி போடச் சொல்லியும் போடாதவர்கள், அடிக்கடி தொடர்ந்து தும்முபவர்கள், இருமுபவர்கள், இவர்களுக்கெல்லாம் தலைவலி அடிக்கடி வரலாம்.

இதுபோக, தினமும் தூங்கும் நேரம் மாறிவிட்டால், திடீரென கடின உடற்பயிற்சி செய்தால், சரியான வேளைக்கு உணவை உண்ணாமல் விட்டுவிட்டால், தொடர்ந்து அதிக நேரம் சிரித்தால், அதிக நேரம் அழுதால், அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருந்தால், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தொந்தரவால், தினமும் தலைக்கு குளித்தால், தலைக்கு குளித்தபின் தலையை சரியாக துவட்டவில்லை என்றால், மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து அதிகமாக உபயோகப்படுத்தினால், வயிறு சரியாக முழுவதும் காலியாகவில்லை என்றால், சென்ட் வாசனை, நாற்றம் முதலியவைகளை முகர்ந்தால், பிடிக்காதவர்களை பார்த்தால் கூட சிலருக்கு தலைவலி வந்துபோக வாய்ப்புண்டு.

 சிறுநீரகம், மூளை முதலியவைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலும் கடுமையான தலைவலி ஏற்படும். உங்களுடைய அன்றாட வேலைகளை, உங்கள் மனநிலையை தலைவலி பாதிக்கிறதா என்பதை உங்களுடைய குடும்ப டாக்டரிடம் விவரமாகச் சொல்லவும்.

அடிக்கடி வரும் தலைவலி, தொடர்ந்து இருக்கும் தலைவலி, தலைவலிக்கு மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றாலும் சரி, கடின வேலையினால் தலைவலி வந்தாலும் சரி உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திக்க வேண்டும்.

பிடிக்காத சென்ட், உணவு, பிற பொருட்கள் முதலியவற்றை ஒதுக்கினாலே தலைவலி தானாகவே பறந்துவிடும். தலைவலி என்பது ஒரு நோயல்ல. உடலில் மறைந்திருக்கும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே. மனதில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையின் அறிகுறியே.

எனவே எது உடலுக்கும், மனதுக்கும் ஒத்துவரவில்லை என்பதை முடிந்தவரை நீங்களே கண்டுபிடித்து அதைத் தவிர்த்துவிடுங்கள். தலைவலி பறந்துவிடும்.

Tags:    

Similar News